Saturday, March 29, 2025

பெரிய உண்மை... பெரிய பொய்...


பெரிய உண்மை சக்தியற்றது
பெரிய பொய் சக்திவாய்ந்தது
பெரிய உண்மை இருப்பிடம் ஏதுமற்றது
பெரிய பொய் உலகத்தையே
தன் காலுக்குக் கீழே கொண்டது
பெரிய உண்மை ஆண்மையற்றது
பெரிய பொய் மலடிகளையும்கூட
கர்ப்பிணிகளாக்குவது
பெரிய உண்மை
பேசுவதற்கு ஏதுமற்றது
பெரிய பொய் எப்போதும்
பெரிய உண்மையையே
பேசிக்கொண்டிருப்பது
-ஆசை, ‘சித்து’ (2006) கவிதைத் தொகுப்பிலிருந்து...

Friday, March 28, 2025

பெயர்களின் பயனின்மை


உனக்குப் பெயர்கள் ஓராயிரம்
ஓராயிரம் மொழிகளில்
இருந்தும் உனக்குத் தெரியாது
உன்னுடைய பெயர்
என்னவென்று
பெயர் தெரிந்து என்ன பயன்?
உன்னுள் கிடையாது
உனக்கென்று ஒரு பெயர்
எனக்குத் தெரியும்
என்னுள்ளும் கிடையாது
எனக்கென்றொரு பெயர்
நீ வரும்போதெல்லாம்
என்மேல் படிந்திருக்கும் பெயரை
உறிஞ்சிக் குடித்துவிட
நாமிருவரும் ஒன்றாகிறோம்
ஏற்கெனவே நாம்
ஒன்றாயிருப்பதுபோலவே
-ஆசை, ‘கொண்டலாத்தி’ (2010) கவிதைத் தொகுப்பிலிருந்து...

Thursday, March 27, 2025

அப்பா தவிர்த்த காதல் செய்


நான் இருக்கிறேன் என்று பார்க்காதே அம்மா சரசமாடு உன் காதலனுடன் தயக்கமேதுமின்றி

என் அம்மா
தன் காதலில் எப்படி
வெட்கம் கொள்கிறாள்
என்று
பிள்ளை நான்
பார்க்கக் கூடாதா
வேர்த்துவரும்
மூக்கையும்
நெற்றிவிழும் முடியையும்
வழித்துவிட்டு
திருட்டுத்தனமாய்
நீ அவனைப் பார்த்துப்
படபடப்பதை
நான் பார்க்க வேண்டும்
அம்மா
நான் இருக்கவேண்டும்
ஆனால்
அதை நீ மறக்க வேண்டும்
உங்கள் இருவரையும்
சுற்றிச் சுழன்று
நான் பார்க்க
வேண்டும்
நீயவனைப்
புணரும்
இருட்டறையில்
முற்றிலுமாக
உன் மோகத்தைப் பார்க்கும்
இருளாய் நான்
இருக்க வேண்டும்
என்றால்
பதற்றமேன் அம்மா
இடுப்பில்
எனை சுமந்து
சுவரோரமாய்
நீ ஒன்றுக்கிருக்கையிலே
உன்னையும்
தாரையையும்
மாறிமாறிப்
பார்த்துச் சிரிக்கவில்லையா
நான்
சிரித்துக் குலுங்கிய
என் கன்னத்தில் தட்டிவிட்டு
முத்தம் தரவில்லையா
நீ
கதவைத் திறந்து வைத்துக்
குளிக்கையிலே
வெளியே
விளையாடும்
எனைப் பார்த்தபடி
கொங்கை அழுக்கு தேய்த்தவளே
அல்குல் அழுக்கு தேய்த்தவளே
உன்னில் ஒரு
உறுப்பு நானம்மா
அதில்
புணர் உறுப்பென்ன
உணர் உறுப்பென்ன
காதல் செய்
காதல் செய்
உன் உதடு முத்தம்
கொடுக்கையில்
அருகிருந்துன்
மின்னல்
பார்க்கும்
கண்தானம்மா
நான்
காதல் செய்
காதல் செய்
காதல் செய்
காதல் செய்
அப்பா தவிர்த்த
காதல் செய்
அப்போதுதான்
நீ அழகு
-ஆசை, ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...

Monday, March 24, 2025

குவாண்டம் செல்ஃபி


ரகசியமே கிடையாது
உனக்கு
கைபேசி கேமராவுக்கு முன்னால்
அதனால்தான்
நீ எடுக்காத தருணங்களிலும்
எடுத்திருக்கப்படக்கூடிய
ஆனால்
எடுக்காமல் விடப்பட்டிருக்கக்கூடிய
அல்லது
எடுக்கப்பட்டிருக்க வேண்டிய
எல்லாப் படங்களும்
எடுத்ததில்
வந்து குவிகின்றன
ஆகவேதான் சொல்கிறேன்
உன் தற்படம் ஒவ்வொன்றும்
தற்கணத்தின் படம் மட்டுமல்ல
முற்கணத்தின்
பிற்கணத்தின் படமும்கூட
இப்படியாக
ஒரு க்ளிக்கின் வழி
உன்னொவ்வொரு உறைபடமும்
அசைபடமாகிறது
நீ எடுத்துக்கொண்ட இடம்
என்னவாகுமோ
கணம் என்னவாகுமோ
கைபேசி என்னவாகுமோ
உன் சிரிப்பு
எங்கே போகுமோ
மென்தலை சாய்த்தல்
ஏதாய் மாறுமோ
என்ற எல்லாமும்
சேர்ந்துதான் க்ளிக்கிக்கொள்கின்றன
நீயாய் எடுக்காத கணத்தில்
உன்னை எடுக்க
வாய்க்கப்பெற்ற
கைகள்
அமுத்தும் அமுத்து
பிரிய மனமில்லாத
பட்டுப்பூச்சிகளாய் மாறி
உன் சிவப்புப் பட்டுப்புடவைமேல்
படிந்துகொள்கிறது
எப்பேர்ப்பட்ட உன்னையும்
புள்ளியாய்ப் படித்துப்
புள்ளியாய் உறைய வைத்து
காணாக் கணத்தில்
அலையாய் வைத்திருந்து
காணும் கணத்தில் மட்டும்
நீயாய் அறிவிக்கிறது
குவாண்டம் செல்ஃபி
ஷ்ரோடிங்கரின் பூனையே*
உன் செல்ஃபியிலிருந்து
வெளியே வா
வெளியே
உன் உயிருள்ள நீ
காத்திருக்கிறாய்
அதனிடம் மூக்குரசி
கால்குலுக்கி
ஒரு ஹாய் சொல்லிவிட்டுப் போ
-ஆசை, ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...
*நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கரின் (Erwin Schrödinger) புகழ்பெற்ற சிந்தனைப் பரிசோதனையில் இடம்பெற்ற பூனை

Saturday, March 22, 2025

உலகின் அரிய பறவையுடன் எட்டு ஆண்டுகள்! - பறவையியலாளர் ப.ஜெகநாதனுடன் ஒரு நேர்காணல்

ப.ஜெகநாதன்

 

ஆசை

உலகிலேயே மிகவும் அரிதான பறவைகளுள் ஜெர்டான்ஸ் கோர்ஸரும் ஒன்று. அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டு 1986-ல் ஆந்திரத்தின் கடப்பா பகுதியில் ஜெர்டான்ஸ் கோர்ஸர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தப் பறவையின் இருப்பிடத்துக்குச் சென்று, அந்தப் பறவையைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டே, அதன் இருப்பிடத்தைக் காப்பாற்றும் முயற்சிகளில் எட்டு ஆண்டுகள் ஈடுபட்டவர் பறவையியலாளர் ஜெகநாதன். அந்த ஆண்டுகளில் அவராலேயே ஏழெட்டு முறைதான் அந்தப் பறவையைப் பார்க்க முடிந்திருக்கிறது என்றால் அந்தப் பறவை எந்த அளவுக்கு அரிதானது என்பது நமக்குப் புரியும். அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து…

Friday, March 21, 2025

மகிழ் ஆதன் கவிதைகள்: உலகக் கவிதை தினச் சிறப்புப் பகிர்வு



இன்று உலகக் கவிதை தினம். அனைத்துக் கவிஞர்களுக்கும் கவிதை விரும்பிகளுக்கும் வாழ்த்துகள். இந்தத் தினத்தை முன்னிட்டு எங்கள் மகன் மகிழ் ஆதனின் (வயது 12) பிரசுரமாகாத 14 கவிதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். மகிழ் ஆதனைப் பற்றிய அறிமுகத்துக்கு இந்தப் பதிவின் இறுதியில் உள்ள லிங்க்குகளுக்குச் செல்லவும்.

Thursday, March 20, 2025

ஊழிமனக் காட்சி

 


காளியவள் களிநடனம்
காட்டி விட்டாள்
ஆழிதனை ஊஞ்சலென
ஆட்டி விட்டாள்
ஊழிமனக் காட்சிதனை
நாட்டி விட்டாள்
பாழிருளைப் படம்பிடித்து
மாட்டி விட்டாள்
-ஆசை, ‘அண்டங்காளி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...

Wednesday, March 19, 2025

மொழிப் பிரச்சினை – ஒரு பார்வை



ஆசை

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாறு?

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் கிட்டத்தட்ட தமிழகமே இந்திய அளவில் தனித்து நிற்கிறது. இதுவரை நடந்தவை ஆறு போராட்டங்கள். நடந்த ஆண்டுகள்: 1938, 1948, 1950, 1965, 1968, 1968. இவற்றில் மிகவும் உக்கிரமாகப் போராட்டங்கள் நடந்த ஆண்டுகள் 1938-ம் 1965-ம். நடராசன், தாளமுத்து என்ற இருவர் 1938 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்போது சிறைசென்றார்கள். 73 பெண்களும் இவர்களில் அடங்குவார்கள். இவர்களுடன் சிறைக்குச் சென்ற 32 கைக்குழந்தைகளும் உண்டு. 1965 போராட்டத்தின்போது சின்னசாமி என்ற இளைஞர் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து இறந்தார். அந்தப் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை ஏறத்தாழ 70. எனினும் 500 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மொழிப்போர் வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.   

போராட்டங்கள் ஏன்?

Tuesday, March 18, 2025

கருப்பையாதல்


என் கரம் சிரம்
குறி கண் உயர்த்தி
தவம் செய்கிறேன்
ஒரு கருப்பை
என்னுள் முளைத்திட
ஒரு கருப்பையாய்
நான் ஆகிட
உயர்த்தியது
அனைத்தும்
தாழும்போதும்
வீழும்போதும்
தேயும்போதும்
ஓயும்போதும்
கருப்பை முளைக்கிறது
அனைவருமே
கருப்பையாய்த்தான்
சாகிறோம்
-ஆசை

Friday, March 14, 2025

ஸ்டீவன் ஹாக்கிங் ஏன் நமக்கு முக்கியமானவர்?



ஆசை

(இன்று ஸ்டீவன் ஹாக்கிங் நினைவு நாள்) 

 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போதுஎழுத்தில் ஒளி ஊடுருவுகிறதுஎன்று சுந்தர ராமசாமி ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அது ஸ்டீவனுக்கும் பொருந்தும்! ஆனால்அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கிஇரண்டு ஆண்டுகளை 55 ஆண்டுகளாக ஆக்கிஇறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தார்.

மரணத்தை வாழ்க்கை வென்ற தன் கதையைப் பற்றி ஸ்டீவன் கூறும்போது, “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும்நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக்குப் புரிபடும்” என்றார். 

ஐன்ஸ்டைனை ஜொலிக்க வைத்த கிரகணம்!



ஆசை

(இன்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் 146வது பிறந்தநாள்)

சூரிய கிரகணங்களைப் பற்றி ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வெவ்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சூரிய கிரகணங்கள் அழிவைக் கொண்டுவரும் என்றெல்லாம் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவற்றில் எந்த வித உண்மையும் இல்லை. இந்த நம்பிக்கைகளுக்கெல்லாம் மாறாக 1919-ல் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது.  அழிவையல்லமனித குலத்துக்கு ஒரு மகத்தான ஒரு விஞ்ஞானியைத்தான் அந்த கிரகணம் பரிசாகத் தந்தது. அவர் வேறு யாருமல்லஐன்ஸ்டைன்தான்.

Thursday, March 13, 2025

மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!

மர்ரே-ராஜம்


ஆசை

மர்ரே-ராஜம் என்றழைக்கப்பட்ட ராஜம் (பிறப்பு: 22-11-1904, இறப்பு: 13-03-1986) தன்னலம் கருதாமல் தமிழுக்காக உழைத்தவர்களுள் ஒருவர்! கூடவே, தமிழர்களின் மறதியால் விழுங்கப்பட்ட மாமனிதர்களுள் ஒருவர். பழந்தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, மலிவு விலையில் அவர் பதிப்பித்த நூல்கள் தமிழின் சமீப வரலாற்றின் சாதனைகளுள் ஒன்று. 1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலை! இந்த நிலையில் பழந்தமிழ் இலக்கியத்தை வெளியிடுவதற்காக 60-களில் ராஜம் ஏற்படுத்திய சாந்தி சாதனா அறக்கட்டளைக்கு அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் முடிக்கப்பட்டுக் கைப்பிரதியாக இருந்த நூல்களெல்லாம் ஒன்றொன்றாக வெளிவரத் தொடங்கின. ‘தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி’, ‘வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி’போன்ற அகராதிகளும் ‘பெருங்காதை’, ‘வார்த்தாமாலை’, ‘ஸ்ரீதேசிகப் பிரபந்தம்’ போன்ற நூல்களும் வெளியாகின.

Wednesday, March 12, 2025

உப்பு சத்தியாகிரகம்: காந்தியின் வரலாற்று நடைப்பயணம்!


ஆசை

“தாக்குங்கள் என்று திடீரென்று உத்தரவு வரவே, ஏராளமான போலீஸ்காரர்கள் முன்னே செல்கிறார்கள். உப்பு ஆலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சத்தியாகிரகிகளின் தலை மீது லத்தியால் தாக்குகிறார்கள். சத்தியாகிரகிகளில் ஒருவர்கூட அடியைத் தடுப்பதற்குக் கையை உயர்த்தவில்லை. மண்டை உடைந்து ரத்தம் தெறிக்க அப்படியே சரிகிறார்கள். அடுத்து வரும் வரிசைக்கும் தெரியும் தாங்கள் தாக்கப்படுவோமென்று. அவர்களும் முன்னே செல்ல, தாக்கப்பட்டு வீழ்கிறார்கள். உதவிக்கென்று நின்றிருக்கும் சத்தியாகிரகிகள் கீழே வீழ்ந்தவர்களைத் தூக்கிச் செல்கிறார்கள். எந்தக் கைகலப்பும் இல்லை, போராட்டமும் இல்லை” என்று எழுதுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளர் வெப் மில்லர்.

Tuesday, March 11, 2025

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறா மீனின் வாயானால்...

வார்ஸன் ஷைர்

ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)


சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார். தன் பூர்வீக நாட்டவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் குரலில் அவர்கள் தேசத் தொல்கதைகளை வார்ஸன் ஷைர் பதிவுசெய்துகொள்கிறார். பிறகு, அவற்றுக்குத் தன் கவிதைகளில், இன்ன பிற எழுத்துகளில் உரு கொடுக்கிறார்.

Monday, March 10, 2025

இமையத்தின் ‘சாரதா’ கதையும் மகிழ்ச்சிக்கு எதிரான இந்திய சமூகமும்

இமையம்


ஆசை

(இன்று இமையத்தின் பிறந்த நாள்)

இமையத்தின் நாவல்கள் அளவுக்கு அவருடைய பல சிறுகதைகள் முக்கியமானவை. சாதியத்தின் நுண்ணடுக்குகள், பசி, ஏழ்மை, ஏழ்மையின் மீது நவீன வாழ்க்கை நடத்தும் தாக்குதல்கள், பெண்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் – உலகம், அரசியல், காதல் என்று பல பேசுபொருள்களில் அமைந்தவை இமையத்தின் கதைகள். இவையெல்லாம் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பதுதான் இமையத்தின் கதைகளின் தனிச் சிறப்பு. இந்தியச் சமூகமும் அப்படித்தானே.

Saturday, March 8, 2025

மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?



ஆசை

பகுதி-1

இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Friday, March 7, 2025

ஒரு பொம்மலாட்டம் நடக்குது! - ஒட்டுண்ணிகளின் மர்மக் கதை


ஆசை

ஒருநாள் உங்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு ஒருவர் உள்ளே நுழைகிறார். “ஏன் கதவை உடைத்தாய்?” என்று அவரைக் கேட்பதற்குள் அவர் உங்களை காபி கொண்டுவரச் சொல்கிறார். ஒய்யாரமாக உங்கள் வீட்டு சோபாவில் உட்கார்ந்துகொள்கிறார். உங்களை ஓடிப்போய் சரவணபவனில் நானும் பனீர் பட்டர் மசாலாவும் வாங்கிவரச் சொல்கிறார். நீங்களும் அவர் சொன்னதையெல்லாம் அப்படியே செய்கிறீர்கள். அது எல்லா விஷயங்களிலும் தொடர்கிறது. உங்கள் சம்பளப் பணத்தை அப்படியே அவரிடம் தந்துவிடுகிறீர்கள். உங்கள் வீட்டை அவர் பேருக்கு எழுதித் தந்துவிடுகிறீர்கள். கடைசியில் அந்த வீட்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நீங்களே வெளியேறிவிடுகிறீர்கள். இப்படியெல்லாம் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்!

Thursday, March 6, 2025

தான்தான் கடவுள்



தன் வாழ்நாள் முழுவதும்
சிரமப்பட்டு
இந்த ஒரே ஒரு தேன்சிட்டைப்
படைத்தார் கடவுள்
பிறகு தேன்சிட்டுக்கென்று
தேனையும்
தேனுக்கென்று பூவையும்
பூவுக்கென்று செடியையும்
செடியிருக்கத் தரையையும்
தரைக்கென பூமியையும்
பூமிக்காக வானம்
நட்சத்திரங்களென்று
யாவற்றையும் படைத்தார் கடவுள்
எல்லாம் தனக்காகப்
படைக்கப்பட்டிருந்தாலும்
எதைப் பற்றியும்
கவலைகொள்வதில்லை
இந்தத் தேன்சிட்டு
பிரபஞ்சத்தின் எந்த விதிகளையும்
மதிப்பதில்லை
கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்றுகூட
எண்ணிப் பார்ப்பதில்லை
பாருங்கள்
போகிறபோக்கில்
காலத்தின் உள்ளங்கையில்
எப்படி அது எச்சமிட்டுப் போகிறது
என்பதை
என்னவோ தான்தான்
கடவுள் என்பதைப் போல

-ஆசை, கொண்டலாத்தி (2010, க்ரியா) கவிதைத் தொகுப்பிலிருந்து 

Wednesday, March 5, 2025

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது?

  


டெனிஸ் ஓவர்பை

இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.

பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கேஎன்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறிகுண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரிய குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள்

Tuesday, March 4, 2025

ஆன்மா என்பது உடலின் சிறை


நீ என்மேல்
படரும்போது
முதன்முறையாக
என்மேல்
தோல் போர்த்தியதுபோல்
இருக்கும்
உன் தொடுதலின்
பரப்பில் எதிர்பட்ட
என் உடலின் பரப்பெல்லாம்
புலனெல்லாம்
தத்தமது உணவுக்கான
ஒளிச்சேர்க்கையை
நடத்திக்கொள்ளும்
உன் உடல்
என்னுடலில்
தனக்கான
இன்பத்தின் கனிகளைக்
கொய்து
எனக்கான கனிகளைக்
கொட்டிவிட்டுச்செல்லும்
அதில் எடுத்து
நான் கொறிக்கும்
கனியொன்று
யோனிக்கருப்பில்
கனிந்திருக்கும்
இன்னொன்று
முலைத்திரட்சியில்
திரண்டிருக்கும்
மற்றொன்று
உதட்டுச் சிவப்பில்
சிவந்திருக்கும்
நாம் நீக்கமற
ஒருவரையொருவர்
புசித்துக்கொள்வதற்கான இடமே
இவ்வுடல்கள்
என்றறி
நீ உண்ணும் கனி
எனக்கான கனியாய்
மாறும் விளையாட்டு
இது என்றறி
ஒவ்வொரு அங்குலமாக
என் உடலில் நீ ஏறும்போது
அவ்வவ்விடங்களின்
ஆன்மாவைத் தேடாதே
ஆன்மா என்பது
உடலின் சிறையென்றறி*
ஆன்மாவிலிருந்து
உடலை விடுவிக்கவே
நம்
ஒட்டுமொத்த இன்பத்தையும்
கொண்டு
தாக்குதல் செய்துகொள்கிறோம்
ஏதோ எப்போதோ
உடலின் ரூபத்தை
ஆன்மா எடுத்துக்கொண்டுவிட்டது
அதனிடம் நீ உடலில்லை எனவும்
உடலிடம் நீதான் உடல்
உடல்தான் இறுதி எனவும்
சொல்ல நாம்
கடமைப்பட்டுள்ளோம்
நம் ஒவ்வொரு
அங்குலத்துக்கும்
நாவிருக்கிறது
அதைக் கொண்டு
ஒரு இடம் விடாமல்
சுவைப்போம்
நம் ஒவ்வொரு அங்குலத்துக்கும்
குறியுண்டு
அதைக் கொண்டு
ஒரு இடம் விடாமல்
புணர்வோம்
ஆன்மாவைத்
துரத்திவிட்டு
அந்த இடத்தில்
குடிபுகும்போது
நாம் இருவரும்
குறிகளாய் மட்டும்
எஞ்சுவது
எவ்வளவு பேரானந்தம்
நம் குறிகள்
பிரபஞ்சத்தின்
இரட்டை விண்மீன்களாய்
பதிந்துவிட
வீழ்ந்த தேவதையான
ஆன்மா தூரத்திலிருந்து
தன் கப்பல் திசைக்கு
நம்மை விண்மீன் பார்ப்பது கண்டு
ஒருவரையொருவர் பார்த்து
நாம் சிரித்துக்கொள்வோம்
-ஆசை, குவாண்டம் செல்ஃபி (2021) தொகுப்பில் இடம்பெற்ற கவிதை
*ஆன்மா என்பது உடலின் சிறை: மிஷேல் ஃபூக்கோ

Thursday, February 27, 2025

நாளை காப்பாற்றலாம்



மனம் சிதறுண்டு
ஒருவன்
உட்கார்ந்திருக்கிறான்
அவன்
தனது கழிவிரக்கத்தைச்
சிற்பமாகச் செய்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை
சிதறலின் இடைவெளிக்கு அப்பால்
கொஞ்சமே கொஞ்சம் தெரியும்
மிச்ச வாழ்க்கை
தன்னைப் போல் இருக்கிறதா
என்று மட்டும் பார்த்துக்கொண்டே
இருக்கிறான்
உங்களுக்கு அவன்
தன் சிதறலுக்கு
மாடலாய்
உட்கார்ந்திருப்பதாகத்
தோன்றலாம்
இந்தக் கிறுக்குத்தனத்திலிருந்து
எப்படியாவது
அவனைக் காப்பாற்ற வேண்டும்
என்று நீங்கள் துடிதுடிக்கலாம்
உங்களிடம்
அவனைக் காப்பாற்றுவதற்கான
எல்லா உபாயங்களும்
ஆயுதங்களும்
கருவிகளும்
இருக்கலாம்
இது அவனுக்கும்
பரிபூரணமாகத் தெரியும்
ஆனால்
உங்கள் அன்பையும் அக்கறையையும்
சிதறல்களை ஒட்டும் பசையையும்
சிதறலின் வேர்களைக்
கண்டுபிடிக்கும் கருவிகளையும்
நாளைக்குக் கொண்டுவாருங்கள் என்றும்
வெளியேறும் வெற்றிடத்தின்
ஓசையை
சிறிது நேரம்
கேட்டுக்கொண்டிருக்க மட்டும்
அவனை அனுமதியுங்கள்
என்றும்
அவன் சொல்லத் தெரியாமல்தான்
உங்கள் முன் சீறி வெடிக்கிறான்
என்பதை
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
அவனை
நாளையோ
நாளை மறுதினமோ
நிச்சயம்
நீங்கள் காப்பாற்றிவிடுவீர்கள்

            -ஆசை