Tuesday, May 26, 2015

உப்புக்கழுதைகள் எப்படித் தொலைந்தன?



தங்க. ஜெயராமன்  

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 26-05-2015 அன்று வெளியான எனது பேராசிரியர் கட்டுரையின் முழு வடிவம் இங்கே)

                          
 அப்போது கழுதைகள்தான் உப்பைச் சுமந்துகொண்டு தெருத் தெருவாக வரும். உப்பு வாங்க கடைக்குப் போகவேண்டாம். உப்புக்கழுதைகளை இப்போது காணமுடிவதில்லை.   கன்னாரத் தெருக்களையே காண முடியாது. கொல்லுப்பட்டறை தேடிப்போனாலும் தென்படாது. வண்டியில்லை. எனவே மாடும் இல்லை. நெல் குத்துவதில்லை. எனவே உரல் இல்லை, உலக்கையும் இல்லை.  வளர்ச்சியின் வேகம் இவற்றை அடித்துச்செல்வது வழக்கம்தானே! ஆனால், உப்புக்கழுதைகளின் கதையே வேறு!

உப்புத்தொழிலும் நசிந்துபோய் இப்போதோ, அப்போதோ என்றுதான் இருந்தது. கருணைக்கொலையாக 2006ல் ஒரு சட்டம் செய்தார்கள். பிறகு 2011ல் சில விதிகளை வகுத்தார்கள். விளைந்துவரும் உப்பை அப்படியே மனிதர்கள் உண்பதற்கு விற்கக்கூடாது என்று தடை.  கடைத்தெருவில் இருந்த உப்பை ஒரு மாவட்ட அதிகாரி பறிமுதல் செய்ததாகச் சில ஆண்டுகளுக்கு முன் செய்தி வந்தது. உற்பத்தி செய்யக்கூடாது, விற்கக்கூடாது, விற்பனைக்கு வைத்திருக்கக்கூடாது, வாகனங்களில் ஏற்றிச் செல்லக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உப்புக்குத் தடை இருந்தது நினைவுக்கு வந்தது. எளியவர்களையும் விடுதலை இயக்கத்துக்கு ஈர்த்த முதல் போராட்டம் இந்தத் தடையை உடைப்பதற்கான உப்புச் சத்தியாக்கிரகம்தான்.   சாதாரண உப்பு நாட்டின் சுயமரியாதைப் பிரச்சினையானது. பிரச்சார உத்தியாக அந்தப் போரை மீண்டும் நிகழ்த்திக் காட்டுபவர்கள்தான் தற்போதைய தடைச் சட்டத்தையும் உருவாக்கினார்கள். காரணம் வேறாக இருப்பதால் நீங்கள் இதற்கு ஒரு முரண்பாடு கற்பிக்க முடியாது.

வெளிப்படையான வெள்ளையர்கள்
அப்போது உப்புக்கு வரி உண்டு. பெரும்பகுதி உப்பளத்துக்கு அரசுக்கு வாரமோ, ரொக்கக் குத்தகையோ தரவேண்டும். உப்பில் ஒரு கருப்புச் சந்தை உருவாகும் நிலை.  அதைச் சமாளிக்கத்தான் அன்றைய ஆங்கில அரசின் உப்புச்சட்டம். மக்களின் உடல் நலனில் அரசுக்குப் பிறந்திருக்கும் அக்கறையே தற்போதைய சட்டத்துக்குக் காரணம். விளைந்த உப்பை விளைந்தவாறே உண்பதால் நமக்கு அயடீன் சோகை வரும் என்பது அறிவியல். இப்போது உப்புக்கழுதைகளை உப்போடு சேர்த்து பறிமுதல் செய்யலாம். அது அறிவியல் அடிப்படையில், நுகர்வோரின் நலனுக்குச் செய்வதாக இருக்கும். அறிவியலை மறுக்கமுடியுமா? அதன் அடிப்படையில் சட்டம் செய்ய அரசுக்கு இருக்கும் கடமையைத்தான் மறுக்கமுடியுமா? இரண்டுமே இயலாது என்பதுதான் தடைச் சட்டத்தின் அடிப்படையான அனுமானம். முதலாளிய நியாயமான வணிகப்போட்டியால் கழுதைகள் தொலையவில்லை. இப்படி, உப்புக்கழுதைகள் தொலைந்துபோனதன் கதையே வேறுதானே! வெள்ளையர்கள் நம்மைவிட வெளிப்படையானவர்கள் என்பது கதையின் நீதியாக இருக்குமோ?    
 “உப்பு, உப்பு. உப்பு வாங்கலியோ உப்பு” என்று கூவிக்கொண்டு முன்னும் பின்னுமாக இரண்டு கழுதைகளை உப்புச்செட்டியார் ஓட்டிக்கொண்டு வருவார். முன்னால் வரும் கழுதை உப்பைச் சுமந்து வரும். பின்னால் வருவது பண்டமாற்றாக வாங்கும் நெல்லைச் சுமந்து வரும். மரக்கால் நெல்லுக்கு இவ்வளவு உப்பு என்று அளந்து கொட்டுவார். அடை மாங்காய், மோர் மிளகாய் என்று கோடையில் உப்புக்குச் செலவு இருக்கும். வாங்கிய உப்பு முதலில் உப்புப் பானைக்கோ, சாடிக்கோ போகும். அதிலிருந்து கசாலையின் உப்பு மரவைக்கு. உப்பு மரவை, பக்கவாட்டில் சுற்றும் மூடியோடு வட்டமாக மரத்தில் செதுக்கப்பட்டிருக்கும். அதுவும் இப்போது தொலைந்துவிட்டது.
 தனியாகத் தொலையவில்லை
தொலைந்துபோனவற்றில் ஆப்பைக்கூடும் சேர்ந்ததுதான். தொங்கவிட்டிருக்கும் சாண் அகலப் பலகையில், பின்னிவைத்த பத்திகளாக இரண்டு வரிசை ஓட்டைகளிருக்கும். அவற்றில் கரண்டிகளைச் செருகிவைக்கலாம். பத்திகளை முடிந்து பதக்கம் கோர்த்தது போல் மோர்கடையும் மத்துக்காக கடைசியில் ஒரு ஒட்டை இருக்கும். வடிவம் மாறி, அறைகளின் எண்ணிக்கை கூடி, அஞ்சறைப் பெட்டி மட்டும் தரித்தது. அம்மியும், குளவியும், ஆட்டுக்கல்லும் தொலைந்துவிட்டன. அடுத்த வீட்டிலிருந்து இரவலாக இடுப்பில் எடுத்துவரும் திருகையைக் காணவில்லை. வீட்டில் ஊரவைத்த அரிசியும், உளுந்தும் இப்போது எதிர் வீட்டுக் குடைகல்லில் அறைத்து, வழித்து மாவாக வருவதில்லை. வெளிச்சத்துக்காக திண்ணைச் சுவரில் மாட்டிவைக்கும் சுவரொட்டி விளக்கும் தொலைந்துவிட்டது. பொழுது குந்தும் நேரத்தில் தேடும் விளக்குத்தண்டுகளைக் காணவில்லை. ஆனைக்குவளை, அரைக்குவளை, அண்டா, வெண்ணெய்க் குண்டான் எல்லாம் கூட்டுக்குடும்பத்தோடு சேர்ந்து தொலைந்துவிட்டன. வீட்டில் திருமணம் வந்தால், புழங்கும் பித்தளைப் பாத்திரங்களோடு, பரணில் தூங்கும் பெரிய உருப்படிகளையும் எடுத்துப்போட்டு ஈயம் பூச வேண்டியதில்லை. பாரவண்டியும், சவாரி வண்டியும்தான் காலமென்ற மணலில் புதைந்துவிட்டனவே! வண்டிக் காலுக்குக் கட்டு வெட்டிப்போடவும், அச்சுக்குக் கடை திரட்டவும், குடத்துக்கு உள்ளாளி வைக்கவும் கொல்லுப்பட்டறை எதற்கு?
அடையாளங்காட்டி உப்புக்கழுதை
கூடைக்கும், முறத்துக்கும் பனை அகணியால் தலை கட்டப்போவதில்லை. கீழத்தஞ்சையின் ஈடில்லாப் பெருமையான உம்பளச்சேரி மாடு மறைந்து சீமைப் பசு வந்துவிட்டது. “ உம்பளச்சேரி மாட்டுப் பாலைக் குடித்தவளாக்கும்!” என்று தி. ஜானகிராமனின் கதாபாத்திரம் போல் யாரும் இனிமேல் பீற்றிக்கொள்ள வழியே இல்லை. சூட்டிப்பான இந்த மாடுகள் தொலைந்துவிட்டதால், கொம்பு தீய்ப்பது, காது அறுப்பது, சூடுபோடுவது எல்லாம் மனிதன் மறந்துபோன வேலைகளாயின. கிழக்கே உள்ள அத்தனை கிராமங்களின் மாடுகளுக்கும் ஒண்டியாகவே லாடம் தைத்துக்கொண்டிருந்த எங்கள் ஊர் ராவுத்தர் போல் ஒருவரை இனிமேல் பார்க்க முடியாது.  தொலைந்துபோன அந்தக் காலத்தின் சரியான அடையாளங்காட்டி உப்புகழுதைகளே. அவைகளுக்குச் சற்று முன்போ, பின்போ மற்றவைகளும் தொலைந்துவிட்டன.
“அம்மி பொலியலியா, அம்மி” என்று கூவிக்கொண்டு கல் உளியும் சுத்தியலுமாக  இனிமேல் ஒருபோதும் வரமாட்டார்கள். “ஈயம் பூசலியா, ஈயம்” என்று எந்தத் தம்பதியும் இனி வராது.   “கூடைக்குத் தலை கட்டலியா” என்று அகணியும் வாங்கரிவாளுமாக தெருக்களில் ஒரு பெண்ணும் வரமாட்டார். “மாட்டுக்கு கொம்பு சீவலியா, கொம்பு” என்று ஈச்ச ஓலையில் அறை அறையாகத் தடுத்துச் செய்த பையோடு   கூவிக்கொண்டு ஒருவர் வரமாட்டார்.  உங்கள் வீட்டு மாட்டுக் கொம்பில் உங்களுக்காகவே ஒரு சீப்பு அறுத்து வாங்க முடியாது. வண்டிமாடுகளே அற்றுப்போன பிறகு யார்தான் “தலைக் கயிறு வாங்கலியா, தலைக் கயிறு” என்று கூவிக்கொண்டு வருவார்கள்? தொழில் வளர்ச்சியில், பொருளாதார மாற்றத்தில், இவையெல்லாம் மாறத்தான் வேண்டும்.  சாதிக்கும், தொழிலுக்கும் சமுதாயம் போட்டுவைத்திருந்த முடிச்சு தளர்ந்து அவிழ்ந்தது! மாற்றுத் தொழிலுக்கான சுதந்திரம் கிடைத்தது! கைத்தொழில்களும் சட்டம் உந்தாமலேயே செத்துவிட்டன.
 சட்டத்தை உடைக்கும் விளையாட்டு
உப்பைக் காரணமாக வைத்து அரசாங்கமும் மக்களும் ஒருவரை ஒருவர் சாமர்த்தியம் செய்வதாக ஒரு விளையாட்டு இருந்தது. உப்புக்கோடு என்று பெயர். ஆற்று மணலில் விளையாடுவோம்.  நீண்ட செவ்வகத்தின் நடுவில் நெட்டுவாக்காக கோடு கிழித்து, பிறகு குறுக்குக் கோடுகளைக் கிழித்து எதிரும் புதிருமான தட்டுக்களாகத் தடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு குறுக்குக் கோட்டிலும் ஒருவர் கைகளை விரித்து நின்றுகொள்வார். யாரும் கடந்துபோகாமல்  தட்டை அவர் கட்டவேண்டும். அவர் தொட்டுவிட்டால் நுழைந்தவர் ஆட்டம் இழப்பார். நுழையும் குழுவினர் காலை நீட்டிக் கோட்டில் வைத்துக்கொண்டு “தண்ணி, தண்ணி, தண்ணி ” என்று கத்துவார்கள். தட்டைக் கட்டுபவர் தண்ணீர் தருவதற்குப் போகவேண்டும். அப்போது மறுபக்கத்தில் உள்ளே நுழைந்துவிடுவார்கள். இப்படியே, வலமும் இடமுமாக இழுத்து, ஏமாற்றி, எல்லா தட்டுக்களையும் கடந்து செவ்வகத்தின் மறு முனையில் வெளியேறிவிடுவார்கள். அப்போது, “உப்பு போய்ச் சேர்ந்து விட்டது” என்று வெற்றியைக் கொண்டாடுவார்கள். சுங்கச் சாவடியில் சிக்காமல் உப்பு வந்து சேர்ந்துவிட்டது என்பதன் குறியீடு. சட்டமறுப்பு எடுத்துக்கொண்ட விளையாட்டு வடிவம்.  
தை மாத அறுவடையில் வீட்டுக்கு வரும் நெல்லின் முதல் செலவாக உப்பு வாங்குவது வழக்கம். உப்பு விளைவது போல் நெல் விளைய வேண்டும்! சித்திரை வருடப் பிறப்புக்கு வாங்கும் சாமான்களின் ரோக்காவில் உப்புக்கு முதலிடம். இப்போது நெல்லுக்கு உப்பு வாங்க முடியாது. கால மாற்றத்தில், கலாச்சார வழக்கம் நின்றுபோகாமல் வேறு வடிவங்களில் தொடரும். ஆனால், புது நெல்லின் முதல் செலவாக உப்பு வாங்கும் வழக்கம் எடுத்துக்கொண்ட மாற்று வடிவம் எதுவும் தென்படவில்லை.

உப்புகழுதைகளை நம்பமுடியாது
உப்பளத்திலிருந்து அப்படியே வரும் உப்புக்கு அப்பாவிச் சமுதாயம் “ கல் உப்பு” என்று ஒரு புதுப் பெயரைக் கொடுத்தது. இரண்டு இருந்தால், சராசரிச் சிந்தனை ஒன்றை மற்றதன் மேலாகவோ, கீழாகவோ வைத்துவிடும். கல் உப்பு அப்படி மேசை உப்புக்குக் கீழே வந்துவிட்டது. சட்டத்தில் அது  “சாதாரண உப்பு”.  வைத்திருக்கக் கூடாதது, விற்கக்கூடாதது. அது சாதாரண மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால் மகாத்மா காந்தி அதை விடுதலைப் போரின் ஆயுதமாக வைத்துக்கொண்டார். கூசாமல் அந்தப் பெயரைச் சொல்லியே அதைத் தடை செய்கிறது சுதந்திர இந்தியாவின் சட்டம். மாற்றம் தவிர்க்க இயலாத இயற்கை என்ற பொருளதார நியதியை சுதந்திர இந்தியா நம்பவில்லை.  உப்புக்கழுதைகளும், அந்த உப்பும் மற்றவை மறைந்த வழியில் தன்னாலேயே மறைந்துவிடும் என்று நம்பவில்லை. இந்த உப்புக்கழுதைகளை நம்பவேமுடியாது என்று தீர்மானித்தது. எனவே, அறிவியலையும், சட்டத்தையும், தத்துவ அனுமானங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு உப்புக்கழுதைகளை ஒரு வழியாகச் சமாளித்து மீண்டுவிட்டது!  
 -‘தி இந்து’ நாளிதழில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: உப்புக்கழுதைகள் எப்படித் தொலைந்தன?


No comments:

Post a Comment