Thursday, June 18, 2015

தி.ஜா. என்றொரு சக்தி உபாசகர்

                                                    கோட்டோவியம்: ரோஹிணி மணி
ஆசை

தி.ஜா. என்று பிரியமாக அழைக்கப்படும் தி. ஜானகிராமனை நினைத்தாலே மாலைப் பொழுதில் காவிரியாற்றில் சிலுசிலுவென்று ஓடும் நீரில் காலை மட்டும் வைத்துக்கொண்டு படிக்கரையில் உட்கார்ந்திருக்கும் சுகமான உணர்வுதான் ஏற்படும். அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும்போது வாழ்க்கை என்ற நதியின் கரையில் அமர்ந்துகொண்டு வேடிக்கைபார்க்கும் மகாரசிகன் என்று எங்கோ சொன்னதாக நினைவு.
தமது வாசகர்களுக்கு தி.ஜா. அளவுக்கு வாசிப்பு இன்பம் கொடுத்தவர்கள் மிகக் குறைவு. சந்தோஷம், நெகிழ்ச்சி இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் சாதித்தவர் அவர் என்பதுதான் விசேஷம். 

தமிழ் இலக்கியத்தின் எல்லைகள்,சாத்தியங்களெல்லாம் இன்று விரிந்திருக்கின்றன. எத்தனையோ வகையான எழுத்து முறைகள் தமிழுக்கு வந்திருக்கின்றன. அவையும் சுவாரஸ்யமாகவும் மானுட வாழ்வின் வேறு தளங்களைக் காட்டுபவையாகவும் இருக்கின்றன. எனினும், தி.ஜாவை ஆரம்ப காலத்தில் படித்துவிட்டு வேறு வேறு எழுத்துகளைப் படித்துத் தன் வாசிப்பை விரிவுபடுத்திக்கொண்டே செல்லும் ஒரு வாசகர் தன் அடிமனதில் தி.ஜா.வுக்காக ஏங்குவதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் தி.ஜாவிடம் அடைக்கலம் புகுவதும் தவிர்க்க முடியாத ஒன்று. தி.ஜா. என்ற பெயரே எத்தனை பேரைப் பித்துப்பிடிக்க வைத்திருக்கிறது என்ற தகவல் இன்றைய நிதானமான, உணர்ச்சிக்கு இடம்கொடாத வாசகர்களுக்கு வியப்பளிக்கக் கூடும். உண்மையில், தி.ஜாவை ஒருவர் படித்துவிட்டு அவருக்குப் பித்துப்பிடிக்கவில்லை என்றால் அவர் தி.ஜாவை இதயத்தால் படிக்கவில்லை என்றே அர்த்தம்.

‘மோக முள்’ நாவலைப் படித்துவிட்டு தி.ஜா.வின் கும்பகோணத்தையும் யமுனாவையும் தேடி கும்பகோணம் செல்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிச் செல்பவர்களுக்கு இன்றைய கும்பகோணம் ஏமாற்றத்தை மட்டுமே தந்தாலும் அந்த வாசகர்கள் தங்கள் உள்ளத்தில் ஒரு கும்பகோணத்தை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்த கும்பகோணத்தின் தெருக்களில் பேருந்து வரும்போது அவர்களுடைய பாபுக்கள் புழுதிக்குப் பயந்து ஓரமாக ஒதுங்குவார்கள். அவர்களுடைய யமுனா தெய்வீகத் திமிருடன் உள்ளத்தின் வீதிகளில் வலம்வந்துகொண்டிருப்பாள்.உண்மையில் தி.ஜா.வின் வாசகர்கள் அனைவரும் எல்லாப் பெண்களிடமும் யமுனாவைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எல்லோரும் ஒரு வகையில் தங்களை பாபுவுடன் அடையாளம் கண்டுகொள்பவர்கள். திறமைகள் இருந்தும் அவற்றை மேலே எடுத்துச்செல்ல முடியாத அல்லாட்டம், மனதை அலைக்கழிக்கும் சபலம், வேறுபல நிறைகுறைகள். இதெல்லாம் வாசகர்கள் தங்களை பாபுக்கு நெருக்கமானவர்களாக உணரவைக்கின்றன. தங்களின் மன அழுக்கை வெளுக்கும் தூய ஒளியாகத்தான் யமுனாவை இந்த பாபுக்கள் உணர்கிறார்கள். ஆகவேதான், எல்லாப் பெண்களிடமும் யமுனாவைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பெண்ணை இப்படித் தெய்வமாக ஆக்கிப் பார்ப்பதும் ஒரு வகையில் ஆணாதிக்கத்தனம்தான் என்ற குற்றச்சாட்டு தி.ஜா.வின் மேல் வைக்கப்படுவதுண்டு. லா.ச.ரா ஒரு சௌந்தர்ய உபாசகர் என்றால் தி.ஜா. ஒரு சக்தி உபாசகர். அவரை ஆன்மிக ஒளியில்தான் அணுக முடியுமே தவிர தர்க்கத்தின் வழியே அல்ல. பாபுவைப் போலவே தி.ஜா.வின் மற்ற நாவல்களிலும் சிறுகதைகளிலும் வரும் பாத்திரங்கள் பெண்களை இதயத்தில் வைத்துதான் பூஜிக்கிறார்கள். அறிவியல் முறைப்படி பார்த்தால் ஆணிடமோ பெண்ணிடமோ பூஜிக்கத் தகுந்தது ஏதும் இல்லைதான். ஆனால், பூஜிக்க வேண்டியவளாக ஆண் மனதில் பெண் இருப்பதும் படைப்பின் விநோதங்களில் ஒன்றுதானே. இனவிழைச்சுக்கான கவர்ச்சி என்ற பெயரில் இதையும்கூட அறிவியல் விளக்கக் கூடும். ஆனால், ஆண் மனது பெரும்பாலும் பெண்ணைப் புதிராகவும் தெய்வீக ஒளியுடனும்தான் பார்க்கிறது. அந்த மனப்பான்மையின் கலை வெளிப்பாடுகள்தான் தி.ஜா.வின் காலத்தால் அழியாத நாயகிகள்.
ஒரு ஆணின் மனது ஒரு பெண்ணின் மீது அன்பு, காமம், வக்கிரம், தெய்வீக உணர்வு உள்ளிட்ட எத்தனையோ உணர்வுகளைக் கொள்ளும். இதில் வக்கிரத்தையும் காமத்தையும் எரிக்கும் நெய்தான் தெய்வீகம். ஆகவே, வெறுமனே பெண்ணைத் தெய்வமாக்கி அவளை அடிமைப்படுத்துகிறார் தி.ஜா. என்று சொல்வதில் அர்த்தமில்லை. வக்கிரத்தை அழிக்க நினைக்கும் ஒரு மனப்போராட்டத்தின் வெளித்தெரியாத விளைவுதான் பெண்ணைத் தெய்வமாக பூஜிப்பது. பெண்ணின் தெய்வ நிலை என்பது ஒரு ஆதர்சம். அதே நேரத்தில் யதார்த்தத்தையும் தி.ஜா. காட்டாமல் இருப்பதில்லை.யமுனாவைப் பற்றி பாபுவுக்கு இப்படியெல்லாம் சிந்தனைகள் ஓடுகின்றன: அவள் ‘சாப்பிடுகிறாள். சோற்றையும் பண்டங்களையும் பல்லால் கடித்து மென்றுதானே தின்கிறாள். இவள் சாப்பிடும்போது விகாரமாக இல்லை. அவ்வளவுதான். இவள் முகத்திலும் வேர்வை அரும்புகிறது. நாம் பேசுகிற வார்த்தைகளை,பாஷையைத்தானே பேசுகிறாள் இவளும்! இவளுக்கும் குளியல், சோப்பு, அங்கங்களை மறைத்துக்கொள்ள ஒரு புடவை, ரவிக்கை எல்லாம் வேண்டித்தானிருக்கின்றன.’ இதே உணர்வுகள்தான் வாசகர்களுக்கும் பாபுவின் யமுனாவிடமும் தங்கள் நிஜ வாழ்வின் யமுனாக்களிடமும் ஏற்படும்.
தமிழ் வாசகர்கள் அதிகம் காதலித்திருக்கும், காதலிக்கும் பாத்திரம் யமுனாதான். யமுனாவை வயதானவளாக தி.ஜா. காட்ட ஆரம்பிக்கும் தருணத்தில் தி.ஜா. மீது கோபம் கொள்ளாதவர்களே இருக்க முடியாது. யமுனாவுக்கு எப்படி வயசாகலாம்? அந்தக் கட்டத்தோடு நாவலை மூடிவைத்தவர்களும் இருக்கிறார்கள்.
யமுனாவை தெய்வீகமாக்குவது உண்மைக்குப் புறம்பாகவோ, கற்பனாதீதமாகவோ தோன்றலாம். ஆனால், பச்சை யதார்த்தத்தைப் பற்றிக்கொண்டிருந்தால் இந்த உலகத்தில் கலைகள், கவிதைகள், படைப்புகளெல்லாம் எப்படித் தோன்றியிருந்திருக்கும்? உண்மையில் பச்சை யதார்த்தமென்று ஒன்றும் இல்லை என்பதை நவீன அறிவியலின் குவாண்டம் கோட்பாடு சொல்கிறது. நாம் பார்த்தால் நிலவு இருக்கிறது, பார்க்காவிட்டால் நிலவு என்பது கிடையாது. நிலவை ஒருவர் நிலவாகப் பார்க்கலாம், இன்னொருவர் அழகான பெண்ணாகப் பார்க்கலாம். இப்படிப் பல்வேறுபட்ட உண்மைகளின் தொகுப்புதான் நிலவு. உலகம், வாழ்க்கை எல்லாமே அவரவர் விளக்கங்களின் (வெர்ஷன்) தொகுப்புதான். ஆகவே, பெண்ணை தெய்வீகமாகப் பார்ப்பதும் ஒரு விளக்கம்தான். அது உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லா விளக்கங்களையும் அனுமதிப்பதுதான் உண்மை அல்லவா?
நம்முடைய சம காலத்திய படைப்பு என்பதிலிருந்து சற்று விலகி நின்று பார்த்தால் தமிழ் இலக்கியத்தின் ஒருசில காவியப் பெண்களில் யமுனாவும் ஒருவர் என்ற உணர்வு ஏற்படக் கூடும். எனினும், தி.ஜா.வின் சாகாவரம் பெற்ற பெண்தெய்வங்களில் யமுனா ஒற்றை உதாரணம் மட்டும் கிடையாது. அவரது வெவ்வேறு படைப்புகளில் யமுனாவின் தெய்வாம்சம் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு பாத்திரங்களாக வெளிப்படுகிறது. உண்மையில் யமுனாவை விடத் துடிப்பு மிக்க பெண் தெய்வம் என்றால் ‘உயிர்த்தேன்’ நாவலில் வரும் செங்கம்மாதான். யமுனாவையாவது பிராமணத் தன்மை கொண்ட ஒரு பாத்திரம் என்று யாராவது ஒதுக்கிவிடலாம் (பிராமணத் தந்தைக்கும் மராட்டிய வழிவந்த தாய்க்கும் பிறந்தவள் யமுனா). செங்கம்மாவை அப்படி ஒதுக்கிவிட முடியாது. அவள் கிராமத்துப் பெண் தெய்வம். வழக்கமாக, கிராமத்தில் உக்கிரமான பெண் தெய்வங்கள்தான் இருக்கும்.செங்கம்மாவோ மிகவும் சாந்தமான, வெகுளித்தனமான பெண்தெய்வம். ஒருவர் விதிவிலக்கில்லாமல் எல்லோருடைய அழுக்குகளையும் தன்னுடைய அப்பழுக்கற்ற குணத்தால் கரைத்துவிடக் கூடியவள். உச்சபட்ச அழுக்கைக் கரைக்கும் இடத்தில் நாவல் நிறைவு பெறுகிறது. கிராமத்தில் கோயில் கட்டும் பூவராகவன் உண்மையில் கோயில் கட்டுவது செங்கம்மாவுக்குத்தான், பூசலாரைப் போலத் தன் மனதில்.
யமுனாவைப் போல மூர்க்கமாக ஆட்டிப்படைப்பவள் அல்ல செங்கம்மா. ஊதுபத்தி புகைபோல மனதை ஊடுருவி, மனதின் துர்நாற்றங்களை அகற்றிவிடுபவள் செங்கம்மா. யமுனாவைவிட யதார்த்தமாகவும் வெகுளித்தனமாகவும் இருப்பவள் செங்கம்மா. அந்த வெகுளித்தனத்தாலேயே தெய்வ நிலையை அவள் அடைகிறாள். தி.ஜா.வின் முழுமை பெற்ற படைப்பு ‘உயிர்த்தேன்’ என்று அசோகமித்திரன் ஒரு தடவை சொல்லியிருக்கிறார்.
யமுனா, செங்கம்மாவின் வரிசையில் ‘அம்மா வந்தாள்’ இந்து. அவளிடம் தெய்வீகக் குணங்களை அதிக அளவில் தி.ஜா. காணவில்லையென்றாலும் அழகினால் தெய்வீக அம்சம் கொண்டவள் ஆகிறாள் இந்து. புறாக்கள் போல் விம்மி நடக்கும் பாதங்களைக் கொண்டவள் இந்து. ஆகா, பெண்களை வர்ணிப்பதில் தி.ஜா.வுக்கு ஈடு இணையே கிடையாது. அதுவும், தி.ஜா. அளவுக்கு அடங்கிய தொனியில், அமைதியான உக்கிரத்தோடு காமத்தை எழுதியவர் வேறு யார்?
ஆனால், ‘அம்மா வந்தாள்’ நாவலில் யமுனாவுக்கு ஈடான பாத்திரம் அப்புவின் அம்மா அலங்காரம்தான். அலங்காரத்துக்கு இன்னொருவர் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தும் அவள் தெய்வப் பிறவியல்லவா, அவளை நாம் எப்படி எடைபோடுவது என்று இருக்கும் அப்பா பாத்திரம் தமிழில் ஒரு விநோதம். அப்பழுக்கற்ற இந்த அழகை அப்பப்பா நம்மாலெல்லாம் அடக்கியாள முடியாது என்று துடித்துப்போகிறார் அவர். அப்புவுக்கு இந்த உண்மை தெரியும்போது துடித்துப்போனாலும் அவனுக்கும் தன்னுடைய அம்மாவிடம் களங்கம் ஏதும் காண முடியவில்லை. மானுட அளவுகோல்களைத் தெய்வப் பிறவிகளிடம் பொருத்திப் பார்ப்பதா? அம்மா, சாதாரணமானவளா? தன்னுடைய சிம்மாசனத்தைத் தானே சுமப்பவளல்லவா?
எனினும், தெய்வத்தையே அவமானம் கொள்ள வைக்கும் இரண்டு பெண் தெய்வங்களை ‘கோபுர விளக்கு’ என்ற ஒரே கதையில் படைத்திருப்பார் தி.ஜா. இந்தக் கதையில் தி.ஜா.வே கதைசொல்லியாக வருகிறார். வாழ்ந்துகெட்ட குடும்பத்தைச் சேர்ந்த தருமு என்ற பெண் தன்னுடைய வீட்டில் உள்ள பத்து உயிர்களைக் காப்பாற்ற பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். கதாசிரியர் ஒரு நாள் கோயிலுக்குப் போகிறார். அப்போது துர்க்கையம்மன் சன்னிதியில் நின்றுகொண்டு தருமு இப்படி வேண்டிக்கொண்டிருக்கிறாள், “ஈச்வரி! இரண்டு நாளாக வயிறு காயறது. இன்னிக்காவது கண்ணைத் திறந்து பார்க்கணும். தாராள மனசுள்ளவனா… ஒருத்தனைக் கொண்டுவிட்டுத் தொலைச்சா என்னவாம்…?” கதாசிரியர் இதைக் கேட்டுவிடுகிறார். அந்தப் பெண்ணும் அதைப் பார்த்துவிட்டு ஓடிவிடுகிறார். இதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்தது. கதை ஆரம்பிக்கும்போது தருமு இறந்துபோய்விடுகிறாள்.அப்போது கதாசிரியர் தனது மனைவியிடம் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவளோ அழ ஆரம்பித்துவிடுகிறாள். “அந்தப் பொண்ணு ஊத்தின எண்ணெய்க்காவது மனம் இரங்கப்படாதா அந்த சாமி. இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டிண்டு உக்கார்ந்திருக்கே! துர்க்கைக்கு முன்னாடி நின்னுண்டு அழுததுன்னேளே.பொம்மனாட்டி கண்ணுல ஜலம் விட்டா உருப்படுமா அந்தத் தெய்வம்? அவ யாராயிருந்தா என்ன? மனசு உருகிக் கண்ணாலே ஜலம் விட்டுதே அது.” என்றெல்லாம் குமைகிறாள். துர்க்கை, தனது கடவுள் வரலாற்றில் தருமுவினது போன்ற வேண்டுதலையும் கதாசிரியரின் மனைவியினது போன்ற சாபத்தையும் எதிர்கொண்டிருக்கவே மாட்டாள். வேண்டுதலாலும் சாபத்தாலும் உக்கிரமான பெண் தெய்வங்களாக ஆன பாத்திரங்கள் அவர்கள்.

இன்னும் எத்தனையோ பெண் தெய்வங்கள். ‘சிலிர்ப்பு’ கதையில் கல்கத்தாவுக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பத்து வயது சிறுமி. ‘தவம்’ கதையில் ஆண்டுக்குப் பத்து வயது என்ற வீதத்தில் வயதாகும் தாசி. ‘சண்பகப் பூ’ கதையில் வரும் ‘ரத்தப் பூ’. ஆண்களுக்கும் கூட இந்தத் தெய்வீகத் தன்மையைக் கொடுத்து பெண்ணாக ஆக்கிவிடுபவர் தி.ஜா. சீனத் தத்துவத்தின் யிங்-யாங் போலத்தான் இது. ஆண்களிலும் பெண்ணைப் பார்ப்பவர் தி.ஜா.

தி.ஜா. என்ற மகத்தான சக்தி உபாசகர் காலத்தையும் மரணத்தையும் வெல்ல ஆசைப்பட்டுப் படைத்தவைதான் அவருடைய பெண் தெய்வங்கள். எல்லோருடைய காதலையும் தூண்டிக்கொண்டு, அளவற்ற கருணையை வழங்கிக்கொண்டிருக்கும் பெண் தெய்வங்கள் அவை. பாத்திரங்கள் என்ற நிலையைத் தாண்டி வழிபாட்டுக்குரிய சொரூபங்களாக ஆகிவிட்ட பெண் தெய்வங்கள்.
   - (தி. ஜானகிராமனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழில் 2015-ல் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)

2 comments:

  1. உருகிட்டேன் ஆசை.

    ReplyDelete
  2. பிரமாதம். இதைப் படிக்க தி ஜா இல்லாமல் போய் விட்டாரே என்றிருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete