Thursday, July 30, 2015

டைகர்களின் உலகில் யாகூப்கள்தான் எப்போதும் பலிகடாக்கள்!







எஸ். ஹுஸைன் ஜைதி

(‘தி இந்து’ நாளிதழில் 30-07-2015 அன்று, அதாவது யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட தினத்தன்று, வெளியான கட்டுரையின் முழுவடிவம். மொழிபெயர்ப்பு: ஆசை)

அந்தப் பெண்ணின் பெயர் ஜுபைதா.

அவளுடைய அப்பா அவளுடைய அம்மாவை ஒரு அந்நியமான, விரோதமான தேசத்தில் அவள் பிறப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக விட்டுவிட்டு, முக்கியமான காரியத்தை நிறைவேற்றுவதற்காகச் சென்றுவிட்டார். சில மாதங்களுக்குள் அந்தக் குழந்தையையும் அதன் அம்மாவையும் வந்து பார்ப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றார்.  


யாகூப் மேமன் தனது மனைவி ராஹினை கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.

பாகிஸ்தானிலிருந்து திரும்புவதற்கு மேலும் தாமதமானால் இந்தியாவுக்கு வந்து, இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்குவதற்கு மேலும் தடங்கல்கள் ஏற்படும் என்று அஞ்சினேன். நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்,” என்றார் யாகூப் மேமன். பாகிஸ்தானிலிருந்து அவர் தப்பியது குறித்து விரிவாகச் சொல்லும்படி நான் வற்புறுத்திக் கேட்டபோது அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள்தான் அவை.
 

அது 1998-ல் நடந்தது. அப்போது நான் மும்பையில் பத்திரிகையாளராக இருந்தேன். ‘பிளாக் ஃபிரைடே’ என்ற எனது புத்தகத்துக்காக ஆய்வும் மேற்கொண்டிருந்தேன். 1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் பெரிய அளவில் விசாரணை நடத்திக்கொண்டிருந்த சிறப்பு தடா நீதிமன்றத்துக்கு அப்போது நான் அடிக்கடிப் போய்க்கொண்டிருந்தேன். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 100 பேரையும் ஆர்தர் சாலையில் உள்ள சிறையிலிருந்து தெற்கு மும்பையின் கால கோடா சிறைக்கு தினமும் கொண்டுசெல்வதென்பது சிறை அதிகாரிகளுக்கு அசாத்தியமான காரியமாக இருந்ததால் அதே சிறைக்குள்ளேயே ஒரு சிறையை அவர்கள் அமைத்துக்கொண்டுவிட்டார்கள்.


அந்த சமயத்தில் ஒட்டுமொத்த மேமன் இனத்தினருக்கும்  நான் பரிச்சயமாகிவிட்டிருந்தேன். முதலாவதாகக் கைதுசெய்யப்பட்டிருந்த அவர்களுடைய மேலாளர் அஸ்கர் முகதம், அடர்த்தியாக தாடிவைத்திருந்த ஓட்டுநரும், வெடிபொருட்கள் நிரம்பிய ஜீப்பை வோர்லியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அருகில் நிறுத்தி 110 பேரின் இறப்புக்குக் காரணமாக இருந்த அப்துல் கனி துருக் போன்றோருக்கும் என்னைத் தெரியும்.   

ஆனால், யாகூப் இவர்களைவிட மேலானவர். அவர் என்னை மதித்தார்; அதுமட்டுமல்லாமல் தனது கதையை என்னுடன் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், விசாரணை முடிவதற்கு முன் அந்தக் கதையை நான் எழுதப்போய் அதனால் இந்த வழக்குக்கு ஏதாவது குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று அவர் பயந்தார். அவ்வப்போது தெளிவற்ற சில தகவல்களை உதிர்ப்பார். அவற்றை நான் பின்தொடர்ந்து சென்றால் மிகவும் முக்கியமான தகவல்களாக அவை இருக்கும்.   

புத்திசாலித்தனமான, மனசாட்சியுள்ள மனிதர் யாகூப். சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்டாக  இருந்தார். இந்து மதத்தவரான தனது பங்குதாரர் சேத்தன் மேத்தாவுடன் இணைந்து வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். சிபிஐ-க்கு யாகூப் அளித்த வாக்குமூலத்தின் படி, மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அவர் முதன்முதலில் கேள்விப்பட்டது துபாயில் இருந்தபோது 1993 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு பிபிசி செய்திகள் மூலமாகத்தான்.     

பாகிஸ்தானில் சிறைவைப்பு

அந்த துபாயில் ஒளிந்திருந்த ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் குண்டுவெடிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்கள் (இரண்டு மேமன் சகோதரர்கள் துபாயில் ரெசிடெண்ட் விசாக்கள் பெற்றிருந்தார்கள்). டைகர் மேமன் மட்டும் விதிவிலக்கு; அவர் அந்தக் குண்டுவெடிப்புகளைக் கொண்டாட விரும்பினார். துபாய் அரசு அந்தக் குடும்பத்தினரை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியாகிவிட்டது. அங்கே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை டைகர் செய்திருந்தார். கராச்சியில் ஒவ்வொரு மாளிகையாக அவர்கள் மாற்றப்பட்டுக்கொண்டேயிருந்தார்கள். இறுதியாக ராணுவக் குடியிருப்பின் ரகசியமான தனிப்பிரிவுக்குக் கொண்டுபோய்த் தள்ளப்பட்டார்கள். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று இந்திய அரசு சர்வதேசச் சமூகத்திடமிருந்து ஆதரவைத் திரட்டியதாலும், அதனால் ஏற்பட்ட அழுத்தம் அதிகமாக இருந்ததாலும் அவர்கள் பாங்காக்குக்கூட கொண்டுசெல்லப்பட்டு மறுபடியும் அழைத்துவரப்பட்டார்கள்.      


எனினும், டைகர் மேமனையும் அயூப் மேமனையும் தவிர ஒட்டுமொத்த மேமன் குடும்பத்தினருக்கும் இப்படிச் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்துத் துளியும் விருப்பமில்லை. ஐஎஸ்ஐ அமைப்பு அவர்களுக்கு எந்நேரமும் சேவகம் செய்துகொண்டிருந்தது. அவர்கள் தங்கள் தாய்நாடு திரும்புவதற்கு ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.       

ஆனால், அந்தக் குடும்பத்தினர் ஒன்பது பேர் இந்தியா திரும்புவதை டைகரும் ஐஎஸ்ஐயும் அடியோடு எதிர்த்தனர். யாகூப் ஒன்றும் துணிச்சல் மிக்கவர் அல்ல. ஆனால், ஒரு நொடியில் ஏற்படும் துணிவுதான், துணிச்சலான நபரையும் கோழையையும் வேறுபடுத்துகிறது. தனது கொடிய சகோதரனையும் ஐஎஸ்ஐயையும் மீறிக்கொண்டு, எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தியா திரும்புவதென்ற முடிவை அவர் தீர்க்கமாக எடுத்தார்.     

வரவுசெலவுக் கணக்குகளை எழுதுவதும், நிலுவைத் தொகையைப் பதிவுசெய்வதும் எல்லா கணக்குகளையும் நேர்செய்து பிசிறுகள் இல்லாமல் உறுதிசெய்துகொள்ளும் நிபுணத்துவத்தை அவருக்கு வழங்கியிருந்தன. மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎஸ்ஐயின் முக்கியப் புள்ளியான தௌஃபிக் ஜாலியாவாலாவுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். ரகசிய இடங்களை வீடியோ எடுத்துக்கொண்டார்; புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்; உரையாடல்களையெல்லாம் பதிவுசெய்துகொண்டார்; பிறகு, போலி பாஸ்போர்ட்டுகள், பாகிஸ்தான் அரசு வழங்கியிருந்த வெவ்வேறு அடையாள அட்டைகள் போன்ற ஆவண ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டார்.
    
தனது பயணப்பெட்டி முழுவதும் ஆதாரங்கள் நிரம்பியதும், காராச்சி-காத்மாண்டு-துபாய்-காத்மாண்டு-கராச்சி என்று சுற்றுவழி பயணச்சீட்டை லூஃப்தான்ஸா விமானத்தில் எடுத்துக்கொண்டார். அவர் திரும்பிவருவார் என்ற உறுதியில் ஐஎஸ்ஐ ஆட்கள் அவரது பயணத்துக்கு முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு ஏற்பாடு. இந்தியாவுக்கு நேரடியாகப் போக முடியாதென்பது யாகூபுக்குத் தெரியும். பாகிஸ்தான் அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளும் கூட்டாளிகள் என்பதால் துபாயில் சரணடைவது என்பது மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். நேபாளம் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு என்று அவர் நினைத்ததால் காத்மாண்டுவைத் தேர்ந்தெடுத்தார். நம்பகத்தன்மை கொண்ட ஒரு தவறை அவர் வேண்டுமென்றே செய்ய நினைத்தார்.     
 
பாதுகாப்புப் பரிசோதனையின்போது யாகூப் தனது பெட்டியைத் திறப்பதற்காக வேண்டுமென்றே தடுமாறியபோது நிறைய பாஸ்போர்ட்டுகள் பெட்டியிலிருந்து சிதறி கீழே விழுந்தன. எச்சரிக்கை அடைந்த அதிகாரிகள் யூசுஃப் அஹமதைப் பிடித்துக்கொண்டார்கள். தனது உண்மையான பெயர் யாகூப் மேமன் என்ற உண்மையை பிடிபட்ட உடனே அவர் வெளிப்படுத்தினார். ரகசிய ஏற்பாட்டின்படி 48 மணி நேரத்துக்குள் அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தரப்பு கூறும் விளக்கம் சற்றே மாறுபடுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் யாகூபின் பெட்டியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒன்றைக் கண்டதாகவும் அதனால் பெட்டியைத் திறந்துகாட்ட அவர்கள் கேட்டதாகவும் அப்போதுதான் பாஸ்போர்ட்டுகள் சிதறி விழுந்தன என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.       

 நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பிறகு நேபாள எல்லைக்கு அருகே யாகூப் விடப்பட்டார். தனிவிமானம் ஒன்றில் அங்கிருந்து புதுடெல்லிக்கு அழைத்துவரப்பட்டார். புதுடெல்லி ரயில் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது; ஆனால் அப்படியெல்லாம் ஏதும் தன் வாழ்க்கையில் நிகழவேயில்லை என்று தான் எழுதிய கடிதமொன்றில் யாகூப் தெரிவிக்கிறார். 

வெகு விரைவில் யாகூப் எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டார். மும்பை குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்துவதற்காக தூர்தர்ஷனில் அவர் காட்டப்பட்டார். சில வாரங்களுக்குள், யாகூப் மேமனின் உதவியோடு, மேமன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரச்செய்தது சிபிஐ. யாகூப் கைதுசெய்யப்பட்டதும் மேமன் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவர்களுடைய முந்தைய திட்டத்தின் படி இந்தியாவுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் துபாய்க்கு ஓடிச்சென்றிருந்தனர். 


பரபரப்பான ஒரு நடவடிக்கையின் மூலம் மேமன் குடும்பத்தினரை ஐஎஸ்ஐயின் கண்காணிப்பிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். பின்தொடரும் ஐஎஸ்ஐ ஆட்களை ஏமாற்றிவிட்டு மேமன் குடும்பத்தினரில் எட்டு பேரை இந்தியாவுக்கு சிபிஐ அழைத்துவந்தது. எட்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளில் சில நிமிடங்களுக்குள் அதுவும் விண்ணப்பதாரர்களைச் சந்திக்காமலேயே இந்திய விசாக்களுக்கான முத்திரை இடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் ஒற்றை நிகழ்வாக இருக்கலாம்.

டைகர், அயூப், அவர்களின் மனைவியர் ஆகியோர் தவிர ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் திரும்பிவந்துவிட்டார்கள். ஒரு மாதக் குழந்தை ஜுபைதாவைக் கைகளில் ஏந்திய ராஹினும் சில நாட்களுக்குப் பிறகு அவர்களோடு சேர்ந்துகொண்டார். 

மன்னிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில்

ஒட்டுமொத்த நடவடிக்கையும் சாத்தியமானது ஒரே ஒரு மனிதரின் அசாத்தியமான துணிவாலும் உறுதியாலும்தான்: அவர்தான் யாகூப் மேமன். கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத இந்தப் பணியை நிறைவேற்றியதற்குப் பரிசாக தண்டனைக் குறைப்பும் மன்னிப்பும் கிடைக்கும் என்று யாகூப் எதிர்பார்த்தார். ஆனால், அரசு அவர்மீது தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்துவிட்டது. சிறையில் யாகூப் கடும் விசாரணைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார். ‘என்கவுன்ட்டர்’ செய்யப்போகிறோம் என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கும்கூட ஒரு முறை அழைத்துப்போயிருக்கிறார்கள்.   


ஆனால், தொலைக்காட்சியிலும், ஆரம்பத்தில் தன்னைக் கையாண்ட சிபிஐ அதிகாரிகளிடமும் சொல்லியவற்றைத் தவிர யாகூபிடம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. தண்டனை நிறுத்திவைக்கப்படும் என்று அவர் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகள் தசாப்தங்களாகின. ஆனாலும், அவருக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை. 

இந்தியாவுக்குப் போய் தங்கள் பெயர்களை வழக்கிலிருந்து விடுவித்துவருகிறேன் என்று தனது கர்ப்பிணி மனைவி ராஹினிடம் யாகூப் வாக்குறுதியளித்து 21 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் இப்போது மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்.

யாகூபை இப்போது லஷ்கர்-இ-தொய்பாவின் துப்பாக்கிக்காரரான அஜ்மல் கஸாபோடு சேர்த்துவிட்டிருக்கிறோம். ஒருவர் தனது சகோதரன் மற்றும் அண்டை நாட்டின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்துவதற்காக நாடு திரும்பியவர், இன்னொருவர் மும்பையின் கொலாபாவில் அப்பாவி மக்களைத் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கியவர்.


ஒட்டுமொத்த விசாரணையிலும் பெரிய இழப்பு யாகூபுக்கு என்பதுதான் இதில் முரண்பாடான விஷயம். இந்திய விசாரணை முகமைகளுக்கு ஏராளமான ஆதாரங்களை அவர் கொடுத்துதவியிருக்கிறார், ஆனால் இந்தத் திட்டத்தின் மூளை என்று கடைசியில் ஆக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை டைகர் மேமனும் யாகூப் மேமனும் அனல்பறக்க விவாதித்தபோது டைகர் மேமன் யாகூபிடம் சொல்லியிருக்கிறார், “காந்தியவாதியாக இந்தியாவுக்கு நீ போகிறார், ஆனால் கோட்சேவாக நீ இந்தியாவில் தூக்கிலிடப்படுவாய்”. இதற்கு யாகூப் மேனன் இப்படிப் பதிலடி கொடுத்தார், “நீ சொன்னது தவறு என்பதைக் கடைசியில் நான் நிரூபிப்பேன்.”

இந்த உலகில் டைகர் மேமன்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுவதும் யாகூப்களெல்லாம் தூக்குமேடைக்கு அனுப்பப்படுவதும்தான் பெரும் துயரம்.

-எஸ். ஹுஸைன் ஜைதி, புலனாய்வு பத்திரிகையாளர், மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றிய ‘பிளாக் ஃபிரைடே’ புத்தகத்தின் ஆசிரியர்.
- நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: 

டைகர்கள் உலகில் யாகூப்கள் பலிகடாக்கள்




No comments:

Post a Comment